அகத்தியர் சிவநாடி ஜோதிடம்:
ஓலைச்சுவடிகளில் மறைந்துள்ள
மெய்மையும், புனைவும்
அதாவது, இது ஒரு மருத்துவ நூலைப் போன்றது. இன்ன நோய்க்கு இன்ன மருந்து எனப் பொதுவான விதியை வகுப்பதே சித்தர்களின் வழக்கம். அதை விடுத்து, உலகில் இனிப் பிறக்கப் போகும் கோடிக்கணக்கான மனிதர்களுக்குத் தனித்தனியாகப் பெயர், பெற்றோர் பெயர், எதிர்காலம் என அனைத்தையும் எழுதி, அதனை பார்வதி தேவியிடம் சிவபெருமான் உரைக்க, அகத்தியர் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்தார் என்பது முற்றிலும் முரணான, எவ்வித வரலாற்றுச் சான்றும் இல்லாத ஒரு கட்டுகதையாகும்.
அதில் உள்ள ஓலைகளை ஒவ்வொன்றாகப் படித்து, சில கேள்விகளைக் கேட்பார்கள். "இல்லை" என்று நாம் கூறினால் அடுத்த ஓலைக்குச் செல்வார்கள். இறுதியில் ஒரு ஓலையில் உள்ள தகவல்கள் நமது வாழ்க்கையோடு ஓரளவுக்கு ஒத்துப்போகும்போது, "ஆஹா! உங்கள் நாடி கிடைத்துவிட்டது! அகத்தியர் உங்களுக்காகவே எழுதி வைத்த சுவடி இதுதான்" என்று ஒரு மாயையை உருவாக்குவார்கள்.
உண்மையில் அங்கு நடப்பது என்ன? அங்குப் படிக்கப்படுபவை தனிமனிதனுக்காக எழுதப்பட்ட சுவடிகள் அல்ல. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜோதிடர்களால் எழுதி வைக்கப்பட்ட "ஜோதிடத் துணுக்குகள்" (Astrological Snippets and Permutations) மட்டுமே. குறிப்பிட்ட கிரக அமைப்பு (Planetary Positions) கொண்டவர்களுக்கு என்னென்ன நடக்கும் என்ற பொதுவான ஜோதிடக் குறிப்புகள் அவை. ஒருவரின் ஜாதகக் கட்டமும், அந்த ஓலையில் உள்ள கிரக அமைப்பும் ஒத்துப்போகும் போது, அது அந்த நபருக்காகவே எழுதப்பட்டது போன்ற ஒரு தோற்றம் (Illusion of Personalization) கட்டமைக்கப்படுகிறது.
நாடி வாசிப்பவர் எடுத்தவுடன் பெயரைச் சொல்வதில்லை. அவர் நம்மிடம் கேள்விகளாகவே கேட்பார்:
- "உங்கள் பெயர் ஒரு கடவுளின் பெயரா?"
- "பெயரில் நான்கு எழுத்துக்கள் உள்ளதா?"
- "பெயரின் இறுதியில் 'அன்' என்று முடிகிறதா?"
- "அது ஒரு மலையைக் குறிக்கும் தெய்வமா?"
இப்படித் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டு, பதில் சொல்லும் நபரின் வாயிலிருந்தே மெல்ல மெல்ல எழுத்துக்களை வாங்கி, முழுப் பெயரையும் வாசிப்பவரே கட்டமைப்பார். இறுதியாக, "உன் பெயர் வெங்கடேசன் என்று இந்த ஓலையில் அகத்தியர் எழுதியுள்ளார்" என்று கூறுவார்.
மேலும், மரபான ஜோதிடத்தில் ஒலியியல் (Phonetics) சார்ந்த சில விதிகள் உண்டு. லக்னத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பெயரின் முதல் எழுத்து என்னவாக இருக்கும் என்ற விதி உண்டு. அதனையும், இந்த கேள்வி-பதில் உத்தியையும் இணைத்து, மிகவும் சாதுரியமாகப் பெயரை "கண்டுபிடிக்கிறார்களே" தவிர, சுவடியில் எந்த இடத்திலும் "இவன் பெயர் வெங்கடேசன்" என்று நேரடியாக எழுதப்பட்டிருக்காது. இது ஜோதிடத்தை விட, வாசிப்பவரின் மொழி ஆளுமை மற்றும் உளவியல் தந்திரமே ஆகும்.
பராசரர் போன்ற முனிவர்கள் வகுத்தளித்த இந்திய ஜோதிட முறையானது "பன்னிரண்டு பாவங்கள்" (12 Bhavas/Houses) என்ற அடிப்படையிலானது. லக்னம், தனம், தைரியம், சுகம், புத்திர பாவம் என 12 வீடுகள் மனித வாழ்வை நிர்ணயிக்கின்றன. இந்த மரபான ஜோதிடக் கலையை, ஏதோ தனித்துவமான கலை போல் காட்டுவதற்காகச் செய்யப்பட்ட தந்திரமே, "பாவம்" என்ற சொல்லை "காண்டம்" என்று மாற்றியதாகும்.
- ஜோதிடத்தில் 'முதல் பாவம்' (லக்னம் - பொதுவான வாழ்க்கை) என்பதை நாடியில் 'முதல் காண்டம்' (பொதுப் பலன்) என்றார்கள்.
- ஜோதிடத்தில் 'இரண்டாம் பாவம்' (குடும்பம், செல்வம்) என்பதை நாடியில் 'இரண்டாம் காண்டம்' என்றார்கள்.
- ஜோதிடத்தில் 'ஏழாம் பாவம்' (களத்திரம்/திருமணம்) என்பதை நாடியில் 'ஏழாம் காண்டம்' (திருமணப் பலன்) என்றார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? பாரம்பரிய ஜோதிடத்தையே சிறுசிறு துணுக்குகளாகப் பிரித்து, அதற்கு "காண்டம்" என்று பெயரிட்டு, அதனை அகத்தியர் பெயரால் வணிகமாக்கி விட்டனர் என்பதே அப்பட்டமான உண்மையாகும்.
இந்த மெய்மையை உணர்ந்து, புனைவுகளைப் புறந்தள்ளி, அகத்தியர் அருளிய மருத்துவத்தையும், யோக மார்க்கத்தையும், தத்துவங்களையும் ஏற்றுப் போற்றுவதே, அந்தப் பொதிகை மாமுனிக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும். தொன்மங்களை அறிவியலின் துணைகொண்டும், தர்க்கத்தின் வழியிலும் அணுகுவதே ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிகாட்டும்.
என்றும் பணிவுடன்
சசிகுமார் குப்புசாமி

Comments
Post a Comment
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது 🙏
மரியாதையுடன் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.