திருமணப் பொருத்தம் என்பது வெறும் நட்சத்திரப் பொருத்தம் அல்ல...
அது இரு மனங்கள் இணையும்
'உயிர் பொருத்தம்'!
"ஓம் மங்களம் பகவான் விஷ்ணு: மங்களம் கருடத்வஜ:
மங்களம் புண்டரீகாக்ஷ: மங்களாய தணோ ஹரி:"
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆனால், இன்று பல திருமணங்கள் சில மாதங்களிலேயே முடிவுக்கு வருவது வேதனைக்குரியது. இதற்கு முக்கிய காரணம், வெறும் பெயரளவிலான 'நட்சத்திரப் பொருத்தம்' அல்லது 'பத்து பொருத்தம்' மட்டுமே பார்த்து திருமணத்தை முடிப்பதுதான். உண்மையான ஜோதிடம் என்பது நட்சத்திரங்களை எண்ணுவதல்ல; அது இரு உயிர்களின் கர்ம வினைகளை ஆராயும் 'உயிர் பொருத்தம்'.
இரண்டு ஜாதகங்களை இணைப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஜாதகத்தையும் தனித்தனியாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் பொருந்துகிறார்களா என்பதை விட, தனிப்பட்ட முறையில் அவர்கள் ஜாதகம் எப்படிப்பட்ட வலிமையைக் கொண்டுள்ளது என்பதை அறிவதே உண்மையான திருமணப் பொருத்தம்.
1. ஆயுள் பலம்: அடித்தளமே ஆட்டம் காணலாமா?
"சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது" என்பது பழமொழி. அதேபோல, ஒரு ஜாதகத்தில் 'ஆயுள் பலம்' (Longevity) இல்லை என்றால் அங்கு மற்ற பொருத்தங்கள் எவ்வளவு இருந்தாலும் பயனில்லை. இருவர் ஜாதகத்திலும் மாங்கல்ய ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானம் வலுவாக உள்ளதா என்பதை முதலில் ஆராய வேண்டும். இதுவே உயிர் பொருத்தத்தின் முதல் படி.
2. தசா புத்தி: இருவரில் ஒருவருக்காவது நல்ல நேரம் வருகிறதா?
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை வண்டியை நகர்த்த தசா புத்தி எனும் எரிபொருள் தேவை. இருவருக்கும் ஒரே நேரத்தில் அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி அல்லது பாதகமான தசை நடந்தால் வாழ்க்கை போராட்டமாகிவிடும். எனவே, இருவரில் ஒருவருக்காவது யோகம் தரும் நல்ல தசா நடப்பிலிருக்கிறதா அல்லது இனி வரப்போகிறதா என்பதை உறுதி செய்வது மிக முக்கியம்.
3. குழந்தை செல்வம்: வம்சம் தழைக்குமா? தோஷமும் பரிகாரமும்!
திருமணத்தின் முக்கிய நோக்கம் சந்ததி விருத்தி. புத்திர ஸ்தானமான 5-ம் இடமும், குருவின் பலமும் எப்படி உள்ளது? புத்திர தோஷம் உள்ளதா? அப்படியே தோஷம் இருந்தாலும், அது மருத்துவத்தாலோ அல்லது தகுந்த ஆன்மீகப் பரிகாரங்களாலோ சரியாகும் தன்மை கொண்டதா என்பதை ஆராய வேண்டும்.
4. திருமண நிலைப்புத்தன்மை: இரண்டாம் தாரம் மற்றும் குணநலன்கள்!
சிலர் ஜாதகத்தில் இரண்டாம் திருமணத்திற்கான அமைப்பு (தாரம் அமைதல்) வலுவாக இருக்கும். இதை முன்கூட்டியே ஆராய்ந்து, அதற்கேற்ற ஜாதகத்தோடு இணைக்க வேண்டும். மேலும், மனதைக் குறிக்கும் சந்திரன் மற்றும் புத்தியைக் குறிக்கும் புதன் எப்படி உள்ளனர் என்பதைப் பார்க்க வேண்டும். தீய கிரகங்களின் சேர்க்கையால் தீய புத்தி ஏற்பட்டு, தவறான வழியில் செல்லும் நிலை உள்ளதா என்பதை தனிப்பட்ட ஜாதக ஆய்வில் கண்டறிய வேண்டும்.
5. தோஷங்களின் ஆழம்: செவ்வாய் முதல் புனர்பூ வரை!
வெறும் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம் என்று மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் வீரியத்தை அளவிட வேண்டும். குறிப்பாக, சனியும் சந்திரனும் இணைவதால் ஏற்படும் 'புனர்பூ தோஷம்' (திருமணத் தடை அல்லது மணவாழ்க்கையில் விரக்தி) உள்ளதா என்பதைக் கவனித்து, அதே அளவு தோஷமுள்ள ஜாதகத்தோடு இணைக்க வேண்டும்.
அதிமேதாவிகளுக்கான ஒரு சிறிய விளக்கம்!
சிலர் கூறுவார்கள், "எல்லோரும் ஜாதகம் பார்த்துத் தானா திருமணம் செய்கிறார்கள்? காதல் திருமணம் செய்தவர்கள், ஜாதகம் பார்க்காதவர்கள் எல்லாம் நன்றாக இல்லையா?" என்று.
அதற்கு வள்ளுவர் பெருமான் ஒரு விடை வைத்துள்ளார்:
"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." (குறள் 377)
இதன் பொருள்: பிரபஞ்சத்தால் (அல்லது கர்மாவால்) என்ன எழுதப்பட்டுள்ளதோ அதுதான் நடக்கும். ஜாதகம் பார்த்தாலும் பார்க்காமல் ஜோடி போட்டாலும், ஒரு திருமணம் நிலைக்க வேண்டும் என்று இருவரது ஜாதகத்திலும் (விதியில்) இருந்தால் மட்டுமே அது நிலைக்கும். ஒருவேளை விதியில் பிரிவு என்று இருந்தால், நீங்கள் எப்படித் திருமணம் செய்தாலும் அது பிரிவில்தான் முடியும். ஆக, ஜாதகம் என்பது நடப்பதைத் தெளிவாகக் காட்டும் ஒரு கண்ணாடி மட்டுமே! விதிப்படியே அனைத்தும் நடக்கும்.
இறுதியாக
உண்மையான ஜோதிடர் இருவரின் ஜாதகத்தையும் தனித்தனியே பிரித்து மேய்ந்து, அவர்களின் ஆயுள், குணம், தசாபுத்தி, தோஷங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்பே இணைத்து முடிவெடுப்பார். நட்சத்திரப் பொருத்தம் என்பது உடல்களுக்கானது; உயிர் பொருத்தம் என்பது ஆன்மாக்களுக்கானது. சரியான உயிர் பொருத்தம் பார்த்துச் செய்யப்படும் திருமணங்கள் காலத்தை வென்று நிலைத்து நிற்கும்!
என்றும் அன்புடன்
சசிக்குமார் குப்புசாமி
Contact : 848999968
Comments
Post a Comment
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது 🙏
மரியாதையுடன் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.